Sunday, October 9, 2016

ஞான வடிவினள்


வெள்ளைக் கமலத்திலே வீற்றிருப்பாள்
வெள்ளை உள்ளத் தாமரையில் குடியிருப்பாள்
(வெள்ளை)

நாமகள் என்னும் பெயர் கொண்டவளாம்
நான்முகன் நாவினிலே நின்றவளாம்
(வெள்ளை)

வீணை அவள் கரங்களிலே தவழ்ந்திருக்கும்
மானனைய கருவிழிகள் மருண்டிருக்கும்
தேனனைய இதழில் நகை மலர்ந்திருக்கும்
ஞானம் அவள் வடிவினிலே ஒளிர்ந்திருக்கும்
(வெள்ளை)


--கவிநயா 


 அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!


Sunday, September 4, 2016

முக்கண்ணன் முதல் மகன் முன்னின்று காக்கட்டும்!


அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தித் திரு நாள் நல்வாழ்த்துகள்!
சுப்பு தாத்தாவின் உற்சாகாமான இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!





ஆனை முக நாயகனே! ஆதிசக்தி பாலகனே!
ஐந்து கரம் கொண்டவனே! ஆறுமுகன் சோதரனே!
பெற்றோரே உலகமென்று சுற்றி வந்தவனே!
சிற்றம்பலத்தானின் செல்வப் புதல்வனே!

ஒற் றைத் தந்தமுடன் ஒப்பின்றித் திகழ்பவனே!
பற் றிக் கொண்டு விட்டால் பட்சமுடன் காப்பவனே!
சுழி போட்டுத் தொடங்கி விட்டால் வழி காட்டி உதவிடுவாய்!
பழி யேதும் வாராமல் விழியிமை போல் காத்திடுவாய்!

அருகம் புல் மாலைக்கும் அன்புக்கும் வசப்படுவாய்!
கரிமுகத்து நாயகனே இருவினையை அழித்திடுவாய்!
மூஞ்சூறு வாகனத்தில் முந்தி வந்து அருளிடுவாய்!
மோதகத்தை விரும்பிடுவாய், மோகத்தை விரட்டிடுவாய்!

ஆனைமுகம் கண்டால் அல்ல லெல்லாம் ஓடிவிடும்!
பானை வயிறோனால் பட்ட துன்பம் மாறிவிடும்!
அஞ்சற்க என்று சொல்லி அபயம் தந்து விடும்!
நம்பிக்கை கொண்டோரைத் தும்பிக்கை காத்து விடும்!


--கவிநயா

 

Monday, August 29, 2016

“பொருள்” உதவி!

வணக்கம்! நலந்தானே? உங்களை ஒரு உதவி கேட்கலாமென்று வந்தேன்.

பரத நாட்டியத்தில் நாங்கள் ஆடுகின்ற பாடல்களில் ஒன்றான முருகன் கவுத்துவத்தில், இந்த வரி வருகிறது:

“கடல் கிழிய, மலை முறிய, வரும் முருகன்...”

அடியவர்களுக்கு அருள் புரிய அவ்வளவு வேகமாக வருகிறானா? அல்லது இதன் பின்னே கதை ஏதும் இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. ஏனென்றால்,

வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!”

என்று தொடங்கும் பாரதியின் பாடல் ஒன்றில்

“வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை
உடல் வெம்பி மறுகிக் கருகி புகைய வெருட்டினாய்”

என்று வருகிறது.

“மலை முறிய” என்றால் தாரகாசுரன் கிரௌஞ்ச மலையாக மாறிய போது அந்த மலையைப் பிளந்த கதை என்று வைத்துக் கொள்ளலாம்… ஆனால் கடலைக் கிழித்தது?

தெரிந்தால் சொல்லுங்களேன்!

அன்புடன்
கவிநயா

Tuesday, August 23, 2016

அழகுக் குழந்தை!

அனைவருக்கும் குட்டிக் கிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்துகள்! 


கண்ணன் பிறந்தான், சின்னக் கண்ணன் பிறந்தான்

நானிலம் மகிழ, நான்மறை புகழக் கண்ணன் பிறந்தான்


எங்கள் மன்னன் பிறந்தான்

பூவைப் பூ வண்ணம் அவன் பூந்தளிர் மேனி, அவன்

பூஞ்சிரிப்பில் கிறங்கி விடும் மனமென்னும் தேனீ



வெள்ளித் தண்டை கொஞ்சக் கொஞ்ச

சேவடிகள் கெஞ்சக் கெஞ்ச

மூவடியால் உலகை அளந்த மாயன் வருகிறான், அவன்

ஏதும் அறியாத குழந்தை போலத் தவழ்கிறான்



வா யிதழில் தே னொழுக

வண்டு விழி தான் சுழல

அண்டமெல்லாம் தன்னுள் கொண்ட மாயன் வருகிறான், அவன்

ஏதும் அறியாத குழந்தை போலத் தவழ்கிறான்



அன்னை இல்லை என்பதனால்

அன்னை அன்பிற் கேங்கினனோ?

அன்னை யசோ தாவைத் தேடி மாயன் வருகிறான், அவன்

அழகுக் குழந்தையாகி அவள் மடியில் தவழ்கிறான்


---கவிநயா