Thursday, July 30, 2009

வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி !


வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி - எங்கள்
வாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி!

(வரம்)

ஆதி கேசவனின் அழகு மார்பினிலே
வாசம் செய்யுகின்ற ஆதிலக்ஷ்மி!

தங்கக் கலசமுடன் சங்குச் சக்கரமும்
தாங்கி அருளுகின்ற தனலக்ஷ்மி!

பச்சை ஆடையது இடையில் துலங்கிடவே
பசுமை காக்கின்ற தான்யலக்ஷ்மி!

வெள்ளைப் பாற்கடலில் உதித்து மாலவனின்
உள்ளம் ஆளுகின்ற கஜலக்ஷ்மி!

(வரம்)

எம்மைக் காக்கவென்றே அன்னையாக வந்து
தோற்றம் கொண்டசந் தானலக்ஷ்மி!

வில்லும் அம்புடனும் சூலம் வாளுடனும்
அபயம் அளிக்கின்ற வீரலக்ஷ்மி!

எட்டுக் கரங்களுடன் சுற்றி வரும்பகைகள்
வெட்டி வீழ்த்துகின்ற விஜயலக்ஷ்மி!

மாயை இருள் களைந்து ஞான ஒளியேற்றி
முக்தி அளிக்கும்வித் யாலக்ஷ்மி!

அஷ்ட லக்ஷ்மிவடி வாக வந்திருந்து
இஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி!

உன்னை மனமுருக வணங்கும் பக்தரெலாம்
உய்ய அருள்செய்வாய் ராஜ்யலக்ஷ்மி!

(வரம்)


--கவிநயா

Sunday, July 26, 2009

கற்பக கணபதியே!



கற்பக கணபதியே
பிள்ளையார் பட்டியில் உறைநிதியே!
சொற்பதம் கடந்தவனே
உந்தன் பொற்பதம் பணியவந்தோம்!

ஆறடி உயரத்திலே
அதி யற்புத வடிவத்திலே
கோதறு குணத்தினிலே
வளர் பார்புகழ் கணபதியே!

கல்லினால் ஆனவனே
கருணையில் கரும்பென இனிப்பவனே!
புல்லினால் பூஜித்தாலும்
அகம் மிகமகிழ்ந் தருள்பவனே!

உமையவள் திருமகனே
எம்மை இமையென காப்பவனே!
குறைகளை தீர்ப்பவனே
எங்கள் சுமைகளை ஏற்பவனே!

வலம்புரி நாயகனே
பழம்பெற இறைவலம் வந்தவனே!
மறைகளின் அதிபதியே
எங்கள் மனம்அமர் குணநிதியே!


--கவிநயா

பிள்ளையார்பட்டி பிள்ளையார் மேல ஒரு பாட்டு எழுதலாமேன்னு சுப்பு தாத்தா ஒரு முறை சொன்னார். அவர் சொன்னவுடனேயே எழுதிட்டேன்; இருந்தாலும் இப்பதான் பதிவிட முடிஞ்சது. கற்பக கணபதியின் பொற்பதங்கள் சரணம்.

சுப்பு தாத்தா இந்த பாடலை  மீண்டும் அழகுற கானடா ராகத்தில் அமைத்துத் தந்திருக்கிறார்.  மிகவும் நன்றி தாத்தா!

Sunday, July 19, 2009

முடியும் !

முன்னேறு நீ முன்னேறு!
முடியும் உன்னால் முன்னேறு!

முன்னேறு நீ முன்னேறு!
இலக்கை நோக்கி முன்னேறு!

முதல்அடி வைத்தால் முடிவினைத் தொடலாம்
ஓரிடம் கிடந்தால் எதைத் தான் பெறலாம்?
அயர்ச்சியை விடுத்து முயற்சிகள் செய்தால்
அகிலம் போற்றும்! அகமும் போற்றும்!

ஒவ்வோர் அடியும் ஒவ்வொரு படியாம்
ஒவ்வோர் படியும் உந்தன் வழியாம்!
தடுக்கி விழுந்தாலும் முடங்கி விடாதே!
எடுத்த காரியத்தில் தளர்ந்து விடாதே!

முடுக்கி விடப்பட்ட விசையினைப் போலே
சொடுக்கி விடப்பட்ட அம்பினைப் போலே
கருத்தைப் பதிப்பாய் இலக்கினிலே!
கடுகிச் செல்வாய் பாதையிலே!

முன்னேறு நீ முன்னேறு!
முடியும் உன்னால் முன்னேறு!


--கவிநயா

Sunday, July 5, 2009

அன்பாய் இரு. பாசமாய் இராதே!

ஆன்மீகத்தில் அடிக்கடி காதில் விழுவது இதுதான். பற்றில்லாத அன்பே செலுத்த வேண்டும் என்பது. அதனால் இந்த கேள்வியும் அடிக்கடி எழும்: அன்புக்கும் பாசத்துக்கும் என்ன வித்தியாசம்? இது பற்றி ஒரு உரத்த சிந்தனை… என் புரிதல்கள் தவறாகவும் இருக்கலாம். உங்க எண்ணங்களையும் பகிர்ந்துக்கோங்க!

அன்பு என்பது, அதிலும் தூய்மையான அன்பு என்பது என்ன? இந்த குழப்பம் வரும்போதெல்லாம் எனக்கு மிக நல்ல உதாரணமா வந்து கை கொடுப்பது, “தாய் அன்பு” தான். இந்த உலகத்திலேயே அம்மாவுடைய அன்பு ஒண்ணுதான் தூய்மையானது (no strings attached)! தந்தைமார்கள் சண்டைக்கு வர வேண்டாம்! விதின்னு ஒண்ணு இருந்தாலே, அதற்கு விலக்குன்னும் ஒண்ணு உண்டு :) ஸ்ரீ ஆதிசங்கரர் சொல்லுவார், “கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், ஆனால் கெட்ட அன்னை என்று ஒருவர் இருக்கவே முடியாது” என்று. அன்னையரின் சிறப்பு இதிலிருந்தே தெரியுமே.

ஒரே வரில சொல்லணும்னா, தூய அன்பு என்பது, சுயநலம் கலக்காதது. எதிர்பார்ப்புகள் இல்லாதது.

உதாரணத்துக்கு, தம்பதிகளுக்கிடையில் இருக்கும் அன்பை எடுத்துக்கலாம். அவங்க அன்பில் possessiveness, அதனால் ஏற்படற அசூயை, இதெல்லாம் இருக்கத்தான் இருக்கும். அளவுக்கதிகமான அன்பினால்தான் அப்படி ஆகிறதுன்னு நாம சொல்றோம். ஆனால், அப்படி இருக்கிறதுக்கு பேரு, அன்பில்லை. பாசம்! பாசம் தான் உரிமை கொண்டாடும், உரிமை மறுக்கப்பட்டால் கோபப்படும், அதனால் துன்பப்படும், பிறகு வழுக்கியும் விடும்! இதுவே தூய்மையான அன்பாக இருந்தால், நாம் அன்பு செலுத்தும் நபரிடம் எதையுமே எதிர்பார்க்க மாட்டோம். அவரும் நம் மீது நம்மைப் போலவே அன்பு செலுத்த வேண்டும் என்று கூட!

“சராசரி மானுடர்க்கு எப்படி சுயநலம் இயல்பாயிருக்கிறதோ அது போல் தெய்வ நிலை அறியும்போது பெரியோர்க்கு பரோபகாரம் இயல்பாகும்; அன்பு பெருகும். மனம் கசடுகளை கொண்டிருக்கும் வரை அதில் ஏற்படுவது அன்பாயிருக்காது. பாசமாகத்தான் இருக்கும் என்று யோகம் சுட்டிக் காட்டுகிறது." – ‘நம்பிக்கை’ குழுமத்தில் ஸ்ரீ காழியூரர்.

'என் உடைமை' என்ற எண்ணம், சுயநலம், பொறாமை, கோபம், முதலான இந்த மாதிரி குணங்களைத்தான் ஸ்ரீ காழியூரர் “மனக் கசடுகள்” என்று குறிப்பிடுகிறார்.

எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்பது குறித்து (பாண்டிச்சேரி) ஸ்ரீ அன்னை சொல்வதை கேளுங்க:

“one must learn how to love better: to love with devotion, with self-giving, self-abnegation, and to struggle, not against love itself, but against its distorted forms: against all forms of monopolising, of attachment, possessiveness, jealousy, and all the feelings which accompany these main movements. Not to want to possess, to dominate; and not to want to impose one's will, one's whims, one's desires; not to want to take, to receive, but to give; not to insist on the other's response, but be content with one's own love; not to seek one's personal interest and joy and the fulfillment of one's personal desire, but to be satisfied with the giving of one's love and affection; and not to ask for any response. Simply to be happy to love, nothing more. - The Mother [CWMCE, 8:302-03]”

எவ்வளவு அழகா சொல்லியிருக்கிறார்!

கொஞ்சம் சிந்தித்தாலே தெரியும், நாம் பிறர் மீதும், ஏன், ஜடப் பொருட்கள் மீதும் கூட எவ்வளவு உரிமையும் பற்றும் பாசமும் கொண்டிருக்கிறோம் என்பது! அதனால்தான் பல துன்பங்களுக்கு ஆளாகிறோம்.

மனித இயல்பே சுயநலம்தான், சொந்தம் கொண்டாடுதல்தான், எனும்போது அதனை மாற்றிக் கொள்வது கடினம்தான். ஆனால் அதே காரணத்தால்தான், இந்த குணங்களை மாற்றிக் கொண்டால், அல்லது, மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தால் கூட, மனிதன் தெய்வத் தன்மை கொண்டவனாகி விடுகிறான்!

நாம் இறைவன் மீது வைக்கும் அன்பும் இவ்விதமே தூயதாக இருக்க வேண்டுமென்பார், ஸ்ரீ ராமகிருஷ்ணரும்.

ஆன்மீகமோ, இல்லையோ, இப்படிப் பட்ட தூய அன்பை பழகிக் கொண்டால், அது தினசரி வாழ்விலும் மிகுந்த மன அமைதியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை!

‘அன்புடன்’
கவிநயா

(நீங்க படிக்காட்டாலும் பின்னூட்டமிடாட்டாலும் கூட மாறாத அன்பாக்கும் இது! :)